முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்; ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி., தகவல்
By: Nagaraj Fri, 13 Nov 2020 09:39:49 AM
முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்... தனிநபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு உள்ளதாலும் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளின் சுயாதீனமின்மையாலும் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற 2020ஆம் நிதியாண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
எதிர்க்கட்சியினர் முதலீட்டாளர்களை தைரியமிழக்கச் செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம்தான் அவர்களை தைரியமிழக்கச் செய்கின்றது. 20வது திருத்தச்சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பில் உள்ள அனைத்து பதவிகளுக்குமான நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஒரு தனிநபரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரதான அடிப்படைதான் அதிகாரங்கள் பரவலாக்கல். ஆனால், இங்கு அனைத்து அதிகாரங்களும் ஒரு தனிநபரிடம் குவிக்கப்பட்டுள்ளது. முத்துறைகளுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். சட்டவாக்கத்துறை மற்றும் அரச சேவையில் சுயாதீனம் இல்லாதுள்ளது.
இவ்வாறு இருந்தால் நாட்டுக்கு எவ்வாறு முதலீட்டாளர்கள் வருவார்கள். தனிநபர்
அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் போது முதலீட்டாளர்கள்
நாட்டுக்கு வரமாட்டார்கள். 25 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க
முதலீட்டாளர்கள் சீனாவுக்கு செல்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாக
சீனாவின் நீதித்துறை மறுசீரமைக்கப்பட்டது.
அவர்கள் நீதித்துறையை
சுயாதீனமாக்கினார்கள். நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள்
குறித்த அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர்தான்
முதலீட்டாளர்கள் திருப்தியடைந்தனர். ஆனால், எமது நாட்டில் அரசியலமைப்பில்
வழங்கப்பட்டுள்ள 75 நியமனங்களும் ஒரு தனிநபரால் நியமிக்கப்படுகின்றன.
அரசின் கொள்கையின் பிரகாரம்தான் முதலீட்டாள்ரகள் நாட்டுக்கு வருவார்கள்.
800
பில்லியன் முதலீட்டை நாட்டுக் கொண்டுவருவோம் என்றனர். இன்று 400 பில்லியன்
முதலீட்டைக்கூட இவர்களால் கொண்டுவர முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது
என்றார்.