அணுகுண்டை தயாரிக்கும் திறன் ஈரானிடம் உள்ளது... பெரும் சர்ச்சையை கிளப்பிய பேச்சு
By: Nagaraj Tue, 02 Aug 2022 10:28:18 PM
ஈரான்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு... அணுகுண்டை தயாரிக்கும் திறன் ஈரானிடம் இருப்பதாக அந்த நாட்டின் அணுசக்தி தலைவர் முகமது எஸ்லாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசுகையில், "ஈரானுக்கு அணுகுண்டை உருவாக்கும் தொழில்நுட்ப திறன் உள்ளது. ஆனால் தற்போது அதற்கான திட்டம் எதுவும் இல்லை" என கூறினார்.
தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும் அதற்கு பதிலாக அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் கையொப்பமானது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா
கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. அதோடு ஈரான் மீது கடுமையான பொருளாதார
தடைகளையும் விதித்தது.
இதன்காரணமாக அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை
ஈரான் மீறி வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகள்
ஒருபுறம் நடந்து வந்தாலும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அணுகுண்டு தயாரிக்கும்
திறன் உண்டு என ஈரான் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை உலக நாடுகள்
மத்தியில் உருவாக்கியுள்ளது.