இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்
By: Karunakaran Sat, 15 Aug 2020 12:42:37 PM
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டபோது, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. ஆனால், இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.
இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்ததால், அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. அதன்பின், 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது.
தற்போது பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான ராஜாங்க ரீதியிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்பட்டுள்ள இந்த தூதரக ஒப்பந்தத்துக்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரை நாடு திரும்பும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் தூதரக உறவை தொடங்கி இருப்பதை ஈரான், துருக்கி ஆகிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் உடனான உறவுகளை இயல்பாக்குவதை பாலஸ்தீனர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.