கொலை வழக்கில் ஈரானிய மல்யுத்த வீரர் தூக்கிலிடப்பட்டார்
By: Nagaraj Sun, 13 Sept 2020 5:46:59 PM
மல்யுத்த வீரருக்கு தூக்கு... ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார்.
நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம் மௌசவியை மேற்கோள் காட்டி மாநில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சார்பில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று அஃப்காரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
தெற்கு நகரமான ஷிராஸில் நீர்வழங்கல் நிறுவன ஊழியரை அஃப்கரி (27) கத்தியால் குத்தியதாக கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், ஈரான் கடந்த வாரம் மல்யுத்த வீரரின் தொலைக்காட்சி ஒப்புதல் வாக்குமூலத்தை ஒளிபரப்பியது.
ஆனால், ஒரு தவறான வாக்குமூலம் அளிப்பதற்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக
அஃப்காரி கூறினார் என அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்கள்
தெரிவிக்கின்றனர். அத்துடன், அவர் செய்த குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை
என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரானின் நீதித்துறை
சித்திரவதை செய்தமைக்கான சான்றுகளை மறுத்துள்ளது.
இந்நிலையில், மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, நீதிமன்றத் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.