தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்புக்கு வாய்ப்புகள் குறைவு
By: Monisha Mon, 29 June 2020 3:23:30 PM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பதற்கான ஆலோசனை இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்
இந்த ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க மேலும் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாகாது.
மேலும் தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான கொரோனா அறிகுறி மட்டும் இருப்பதால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.
சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் குறைந்துள்ளது. நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே இதற்கு காரணம். மேலும் பொது போக்குவரத்தில் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. மேலும் கொரோனா அதிகரித்து வரும் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின்படி, சென்னை உள்பட தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.