- வீடு›
- செய்திகள்›
- ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை
By: Karunakaran Mon, 03 Aug 2020 12:15:23 PM
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகளும் எளிதாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்துக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்துக்குள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நங்கார்ஹர் மாகாணத்திலுள்ள ஜலாலாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாத்துல்லா ஓராக்சாய் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அங்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்று அசாத்துல்லா ஓராக்சாய் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அசாத்துல்லா ஓராக்சாய் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உளவு அமைப்பின் அதிகாரியாக இருந்து கொண்டு, நாட்டில் நடந்த பல கொடூர தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.