வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி
By: Nagaraj Wed, 22 Mar 2023 12:40:53 PM
சென்னை: சென்னை-கோவை இடையே தமிழகத்தின் 2வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை செயல்படுத்த 2019 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் சேவை பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளதால், பல பயணிகள் இந்த ரயிலைப் பயன்படுத்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, 5வது வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி சென்னை – மைசூரு இடையே இயக்கப்பட்டது. தற்போது, 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரயில் சேவை இயக்கப்படுகிறது. சென்னை – மைசூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் 20 ஆயிரம் பேர் வரை இந்த ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வந்தே பாரத் ரயிலை தமிழகத்திற்குள் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, சென்னை-கோவை இடையே தமிழகத்தின் 2வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ நீள அகல ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த 3 திட்டங்களின் மொத்த செலவு ரூ.294 கோடி. சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.