கொரோனா தடுப்பூசி 3 நாட்களில் கிடைக்க உள்ளதா? - இந்திய மருந்து நிறுவனம் விளக்கம்
By: Karunakaran Mon, 24 Aug 2020 12:28:26 PM
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என அனைத்து மக்களும் ஆவலுடன் உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை பல நாடுகளில் நடக்கிறது.
இந்தியாவில் புனேயில் உள்ள மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வினியோகிக்க அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 5-ந் தேதி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஆரோக்கியமான 1,600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது,கோவிஷீல்டு தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் கிடைக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் கற்பனையானவை. தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும், எதிர்கால பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கவும் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளது.