இந்து கோயிலுக்காக தன் இடத்தை இலவசமாக வழங்கிய இஸ்லாமிய தொழிலதிபர்
By: Nagaraj Tue, 04 Aug 2020 1:08:49 PM
தனக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு அந்த இடத்தை இலவசமாக வழங்கி உள்ளார் இஸ்லாமியர் ஒருவர்.
காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து சாலையோரத்தில் உள்ள ஒரு வயல்வெளிப்பகுதியில் அப்பகுதி மக்கள் சூலம் வைத்து முனீஸ்வரன் வழிபாடு என்கிற வகையில் நீண்ட காலமாக வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்னர், அந்த இடத்தில் ஆனந்த விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை ஆகிய சாமிகளுக்கு தனித்தனியே கோயில்கள் கட்டியுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த பசுபதி என்பவர் இக்கோயிலை நிர்வகித்து வருகிறார். காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் சின்னத்தம்பி (எ) அப்துல் காதர் என்பவர் இந்த இடம் உள்ள பகுதியுடன் கூடிய நிலத்தை, குடியிருப்பு மனைகளாக்கி விற்பனை செய்வதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்நிலையில், முனீஸ்வரன் வழிபாடு நடத்திய இடத்தை கோயிலுக்கு வழங்க அப்துல் காதரிடம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, அப்துல் காதர் தனக்கு சொந்தமான இடத்தை கோயிலுக்கு தானமாக
வழங்கும் வகையில் கோயிலை நிர்வகித்து வரும் பசுபதியிடம் நிலத்தை ஒப்படைக்க
முன்வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் இருக்கும் பகுதியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்
துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் அமைந்துள்ள இடத்துக்கான
பத்திரத்தை பசுபதியிடம் அப்துல் காதர் வழங்கினார்.
இதுகுறித்து
அப்துல் காதர் கூறியது: இந்த நிலத்தை நான் வாங்கியபோது, சிறிய அளவில்
வழிபாட்டுத் தலம் இருந்தது. பின்னர் எனது அனுமதியின்றி படிப்படியாக
கோயில்கள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது, கோயில்கள் அமைந்துள்ள 1,200 சதுர
அடி மனையை பசுபதி என்பவருக்கு சொந்தமானதாக இலவசமாக அளித்துவிட்டேன்.
மேலும்,
கோயில் அருகில் உள்ள 3 ஆயிரம் சதுரடி நிலத்தை கோயிலுக்கு ஏற்ற வகையில்
பூங்கா அமைப்பதற்கென நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். மக்கள்
வழிபாட்டுக்காக முழு மனதுடன் இதை செய்துள்ளேன் என்றார்.