பெய்ரூட் வெடிவிபத்தால் உருகுலைந்துள்ள லெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்
By: Karunakaran Wed, 05 Aug 2020 2:39:17 PM
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான நாடான லெபனான் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி போர்களும் நடைபெற்றுள்ளது. இதனால் இருநாடுகளும் ஒருவரையொருவர் எதிரிகளாகவே கருதுகின்றனர்.
லெபனானில் பல ஆண்டுகளாக ஹிஸ்புல்ல்லா பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் அரசுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் லெபனான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலே உள்ளது. இந்நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெடிவிபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு அதன் எதிரிநாடாக கருதப்படும் இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. லெபனானில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்க முன்வந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியான செய்தியில், உடனடியாக அவசரகால உதவிகளை சர்வதேச இடைத்தரகு வழியாக வழங்கவும் இஸ்ரேல் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. பெய்ரூட் தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசும், ஹிஸ்புல்லா அமைப்பும் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.