- வீடு›
- செய்திகள்›
- டிரம்ப் முன்னிலையில் வரும் 15-ம் தேதி இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
டிரம்ப் முன்னிலையில் வரும் 15-ம் தேதி இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
By: Karunakaran Wed, 09 Sept 2020 12:10:39 PM
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டபோது, இஸ்ரேல் வெற்றி பெற்றது. இதனால் அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன.
அதன்பின், 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில், பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அதன்படி, இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.
தற்போது, இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமானப்போக்குவரத்து நடைபெற உள்ளது. மேலும், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா, சுகாதாரத்துறை என பல்வேறுத்துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் 15 ஆம் தேதி அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தனது டுவிட்டரில், இஸ்ரேல்-அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் நான் வாஷிங்டன் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.