அதிக அளவில் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என தகவல்
By: Karunakaran Mon, 16 Nov 2020 6:09:22 PM
மாமிசம் சாப்பிடாதவர்களும் முட்டையை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் முட்டை தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது உணவில் முட்டையும் முக்கிய இடம் பிடித்துள்ளது. முட்டை சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், முட்டை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக அளவில் முட்டைகளை உண்பதால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. தற்போது உலகில் பெருமளவு மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் உள்ளன.
உணவு கட்டுப்பாடுகளை மீறினால் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலையில், அதிக அளவில் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று பிரிட்டீஷ் ஜேனல் ஆப் நியூட்ரீசியன் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
50 வயதுக்குட்பட்ட 8,545 பேருக்கு நடந்த சோதனையில் அதிக முட்டை சாப்பிட்டவர்களுக்கு 60 சதவீதம் வரை நீரிழிவு நோய் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அதிகளவில் முட்டை சாப்பிடுவது கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.