நிரந்தரமாக ஆளப்போவது திமுகதான்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
By: Nagaraj Fri, 16 Sept 2022 10:20:59 PM
விருதுநகர்: தமிழ்நாட்டை இனி நிரந்தரமாக ஆளப்போவது திமுகதான் என அக்கட்சி முப்பெரும் விழாவில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், “குடும்பமாக நினைக்கக்கூடிய பாசமிகு பல்கலைக்கழகம் திமுக. அண்ணா பிறந்த நாளில் காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கி வைத்து வரலாற்றில் மறக்க முடியாக நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய நாள் இது. திமுகவின் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியல்ல.
இது ஒரு இனத்தின் ஆட்சி. திராவிடம் என்கிற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையாக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாம் எல்லோருக்கும் என்று பொருள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது தான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிர் மாடல்தான் திராவிட மாடல்.
அனைத்து துறை வளர்ச்சியை இந்த ஆட்சி விரிந்த எல்லையாக
அறிவித்திருக்கிறேன். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்
மகாராஷ்டிரத்திற்கு அடுத்ததாக தமிழ்நாடு இருக்கிறது. தனிநபர் வருமானத்தில்
இந்தியாவை முந்தி தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை சொல்லிக்
கொண்டே போக முடியும். தமிழன் அனைத்திலும் முன்னேற வேண்டும்.
அந்தக்
கனவு என் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக
ஆளப்போவது திமுகதான். இந்தியா முழுமைக்குமான கடமைகள் நமக்கு இருக்கிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு பெற்றவையாக வேண்டும்.
ஒற்றை
மொழியான இந்தியைத் திணிப்பதை ஏற்க முடியாது. சரக்கு,சேவை வரியால் நிதி
உரிமை பறிக்கப்பட்டு விட்டது. நீட் மூலமாக நமது உரிமை
பறிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த முயற்சி
நடக்கிறது.
இதனைத் தடுக்க நாடாளுமன்றத் தேர்தலில்
40 உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு இப்போதே நாம் களப்பணியாற்ற
வேண்டும். 40க்கு 40 எனும் வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். நாற்பதும்
நமதே. நாடும் நமதே” என பேசினார்