தமிழகத்தை நோக்கி படை எடுக்கும் கேரள வாகன ஓட்டிகள் இதற்காக தான்
By: vaithegi Sun, 02 Apr 2023 3:04:15 PM
சென்னை: நாடு முழுவதும் மக்கள் தற்போது பால் முதல் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் வரை அனைத்துமே விலை அதிகரித்து வருவதை குறித்து பெரும் வருத்தத்தில் உள்ளனர். அத்தியாவசியமான பொருட்களின் விலை மட்டுமே உயர்ந்து வருவதாகவும், மக்களின் வாழ்கை நிலை மற்றும் பொருளாதாரம் உயரவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கேரள மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அதன்படி இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 1 லிட்டர் பெட்ரோல் ரூ.109 ஆகவும், டீசல் 1 லிட்டர் ரூ.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.87 ஆகவும், டீசல் 1 லிட்டர் ரூ.95.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக – கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டத்தின் பாறசாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கேரளா வாகன ஓட்டிகள் தங்கள் வண்டிகளில் வந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர்.
இதனை அடுத்து இந்த விலை அதிகரிப்பு சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதால் கேரள அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து கொண்டு வருகின்றனர்.