கொரோனா தொற்றை 100 சதவீதம் குறைப்பது முடியாத காரியம்...மாநகராட்சி கமிஷனர் தகவல்
By: Monisha Sat, 29 Aug 2020 09:56:46 AM
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் இருந்து நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிறது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களும் 52 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:- சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டி உள்ளது. அதில் 17 லட்சம் பேர் தனிமையை முடித்துள்ளனர். 5 லட்சம் பேர் தற்போது தனிமையில் உள்ளனர். கொரோனா தொற்றை 100 சதவீதம் குறைப்பது என்பது முடியாத காரியம்.
இந்த நிலையில் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடித்து வருமாறு களப்பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், பிடித்து வருபவர்களுக்கு கமிஷன் தொகை கொடுப்பதாகவும், கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது. இது 100 சதவீதம் பொய்யான தகவல். இதனை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 மாதத்துக்கு சென்னையில் முககவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
சென்னையில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். தற்போது யாருக்கும் தடை இல்லாமல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.