கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவது வேதனை அளிக்கிறது-உச்ச நீதிமன்றம்
By: Karunakaran Fri, 12 June 2020 4:06:03 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜூலை 31 ஆம் தேதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரலாம் என கணிக்கப்படுகிறது.
இதனால் அதனை சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், டெல்லியில் நிலைமை மோசமானதாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் மாறி வருகிறது. நோயாளிகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாரும் இல்லை என நீதிபதிகள் கூறினர்.
கொரோனா வைரசை தடுக்கும் பணியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றுவதில்லை. மருத்துவமனைகளின் நிலைமை வருந்தத்தக்க வகையில் உள்ளது. இறந்துபோனர்களின் உடல்களை கையாள்வதில் உரிய கவனிப்பையும் அக்கறையையும் கொடுப்பதில்லை. கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் நீதிபதிகள், தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் சோதனை எண்ணிக்கையை 16,000-ல் இருந்து 17,000 ஆக உயர்த்திய நிலையில், டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்தது ஏன்? இது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.