செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்யப்படவுள்ளதாக தகவல்
By: vaithegi Thu, 16 Nov 2023 4:05:18 PM
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைக்காததால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 3 நாட்களாக செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வந்த செந்தில்பாலாஜி வீல்சேர் மூலம் உள்ளே கொண்டு செல்லப்பட்டார்.உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனை மேற்கொண்ட பின், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து கால் மரத்துப்போவதாக செந்தில்பாலாஜி தெரிவித்த நிலையில் மீண்டும் ஆஞ்சியோ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.