வரிவிலக்கு வரம்பை மத்திய அரசு அதிகரிக்கக்கூடும் என தகவல்
By: Nagaraj Tue, 17 Jan 2023 11:41:10 AM
சென்னை: நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதற்கிடையில், மத்திய பட்ஜெட் 2023 இல் அரசாங்கம் வரி விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு உள்ளது. இது 3 லட்சமாக அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முறை வரி செலுத்துவோர் பட்ஜெட்டில் பல பெரிய பரிசுகளைப் பெறக்கூடும். எனினும், இதில் மிகப்பெரிய நிவாரணம் என்னவென்றால், இந்த முறை அரசாங்கம் வரி விலக்குக்கான வரம்பை அதிகரிக்கக்கூடும். 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அரசு இதை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த வரம்பு கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது, இந்த வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக அரசு உயர்த்தியது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இந்த முறை பல பெரிய அறிவிப்புகளை அரசு வெளியிடலாம்.
இப்போது உள்ள வரி வகையின் படி, நீங்கள் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த பட்ஜெட்டில், அரசாங்கம் இந்த தொகையை மேலும் 50,000 ரூபாய் அதிகரிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், மூத்த குடிமக்களுக்கு தற்போது இந்த வரம்பு 3 லட்சம் ரூபாயாக உள்ளது.