மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவடைந்து கூடுதலாக வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்
By: vaithegi Sat, 09 Sept 2023 11:40:32 AM
சென்னை: தமிழகத்தில் வருகிற செப்.15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டால் அவர்கள் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதனால் அரசு வழங்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை பெண்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சில வரைமுறைகளின் அடிப்படையில் 1 கோடி பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரான தகுதி பட்டியலில் 1கோடிக்கு அதிகமானோர் வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தகுதி உடைய அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, 1 கோடியிலிருந்து உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.