- வீடு›
- செய்திகள்›
- சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
By: vaithegi Sat, 08 Apr 2023 10:18:39 AM
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது .... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். அதன் பின்னர் ஒற்றைத்தலைமை விவகாரம் தலைதூக்கியதை அடுத்து, கட்சி இரண்டாக பிளவுற்றது.
கடந்தாண்டு ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் , நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதம் இறுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. எனவே இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை மீண்டும் நாடியிருக்கிறது.
இதுஒருபுறம் இருக்க தமிழக பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கூட்டணி பிளவுறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தலைமையே கூட்டணியை முடிவு செய்யும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். ஒரு பக்கம் பாஜகவுக்கு விசுவாசியாக இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.
அந்தவகையில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியிலும், அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் இருவரும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம்-ம் கலந்துகொள்கின்றனர். ஆனால் இந்த இரு நிகழ்வுகளின் போதும் அரசியல் பற்றி பேச நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.. ஆனால் ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒட்டி, பாஜக மேலிடம் அவருக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுகிறது. இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் பல விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.