தமிழகத்தில் வருகிற 8-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்
By: vaithegi Thu, 03 Aug 2023 08:49:50 AM
சென்னை: கடந்த 1-ம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை வங்காளதேசம் கடற்கரையை கடந்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
வருகிற 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
இதனை அடுத்து இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.