தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தானாம்
By: vaithegi Thu, 14 Sept 2023 11:18:09 AM
சென்னை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களில் ஒடிசா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.
எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் செப். 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற செப். 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
இலங்கை கடலோரப் பகுதிகள்,தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.