தைரியமான முதலீடுகளுக்கான நேரம் இது - பிரதமர் மோடி
By: Karunakaran Thu, 11 June 2020 1:29:40 PM
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கொரோனா நடவடிக்கைகள் குறித்து உரையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றுகையில்,கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம். இது, தைரியமான முடிவுகள் மற்றும் தைரியமான முதலீடுகளுக்கான நேரம் எனவும், இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது எனவும் கூறினார்.
பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவதாகவும், ஒற்றுமையும், வலிமையும் தான் நமக்கு அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து.என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.