யாழ்ப்பாணம் நகரத்தை முடக்கும் நிலை உருவாகும்: மாநகர முதல்வர் எச்சரிக்கை
By: Nagaraj Tue, 03 Nov 2020 09:04:58 AM
யாழ்., மாநகர முதல்வர் எச்சரிக்கை... யாழ்.நகரப் பகுதியில் கொவிட் -19 நிலைமைகள் மோசமடைந்தால், நகரத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறுக்கமான சூழ்நிலை ஏற்படாதவாறு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன்போது முதல்வர் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறியதாவது:
யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் முறையான
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடின், 14 நாட்கள் சுய
தனிமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுவார்கள். மக்கள் மிக அவதானமாக இருக்க
வேண்டும். யாராவது வந்தால், உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல் விடுக்க
வேண்டும்.
வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை
தரும், பேருந்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு,
வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம். பேருந்துகளை கூட
கட்டுப்படுத்தி இருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில், அவற்றைக்
கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.
யாழ்.நகரப்
பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு எந்தத் தடையையும் நாங்கள் தற்போது
விதிக்கவில்லை. உணவகங்களில் மக்கள் அமர்ந்திருந்து உண்ணுவதற்குரிய
அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.