பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் களம் இறங்கிய ஜப்பான்!
By: Monisha Fri, 19 June 2020 5:35:42 PM
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று மே மாதம் குறைந்தது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து, வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஜப்பான் நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் விதிகக்ப்பட்ட அனைத்து ஊரடங்குத் தடைகளையும் ஜப்பான் அரசு விலக்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே நேற்று இரவு கூறியதாவது:- “ஜப்பானில் பொருளாதார நடவடிக்கைகளை மீட்க முயற்சி செய்கிறோம். உள்நாட்டில் அனைத்துத் தளர்வுகளும் நீக்கப்பட்டுள்ளன. வெளியே செல்லும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 6 முக்கியப் பிராந்தியங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஜப்பான் அதன் தனித்துவமான வழிமுறைகளைக் கொண்டு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரஸுக்கு 17,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்15,930 பேர் குணமடைந்த நிலையில், 935 பேர் உயிரிழந்துள்ளனர்.