Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெயலலிதா நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவு

ஜெயலலிதா நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவு

By: Monisha Wed, 08 July 2020 10:18:31 AM

ஜெயலலிதா நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. கட்டுமான பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

jayalalithaa,memorial,construction work,marina beach ,ஜெயலலிதா,நினைவிடம்,கட்டுமான பணி,மெரினா கடற்கரை

பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறியதாவது:- ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. துபாயில் இருந்து வந்திருந்த கட்டிடக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி பீனிக்ஸ் பறவையின் ஒரு இறக்கை அமைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு இறக்கைக்கு ஓரிரு நாட்களில் கான்கிரீட் போடப்பட உள்ளது.

வடநாட்டு பணியாளர்கள் சென்றுவிட்டதால் தற்போது இந்தப்பணியில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வரை 95 சதவீதமான பணிகள் நிறைவடைந்து உள்ளன. 2 மாதத்தில் அதாவது செப்டம்பரில் பணியை நிறைவு செய்து நினைவிடத்தை அரசிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Tags :