- வீடு›
- செய்திகள்›
- ஜோ பைடன் தனது புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல்
ஜோ பைடன் தனது புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல்
By: Karunakaran Tue, 24 Nov 2020 11:31:25 AM
அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
இந்நிலையில் ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அமெரிக்காவின் புதிய மந்திரிகள் யார் யார் என்பதை இன்று ஜோ பைடன் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோ பைடனின் மந்திரிசபை வேட்பாளர்கள் குழுவை மேற்பார்வையிடும் ஜென் சாகி கூறுகையில், ஜோ பைடன் தனது அணியின் உறுப்பினர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆவலுடன் உள்ளார். அவரது மந்திரி சபை சித்தாந்தம் மற்றும் பின்னணி அடிப்படையிலான அமெரிக்காவைப் போல இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரியாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலத்தில் வெளியுறவு இணை மந்திரியாக இருந்த ஆண்டனி பிலிங்கெனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவனை ஜோ பைடன் தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.