- வீடு›
- செய்திகள்›
- போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்தித்த ஜோ பைடன்
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்தித்த ஜோ பைடன்
By: Karunakaran Fri, 04 Sept 2020 2:20:11 PM
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தபோது, பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் 7 முறை சுட்டனர். இதனால் படுகாயமடைந்த அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணம் உள்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த போராட்டங்களின் பல இடங்களில் வன்முறையில் முடிந்த வண்ணம் உள்ளது. தற்போது அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
தேர்தலையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருவரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜேக்கப் பிளேக் மீது தாக்குதல் நடந்த மாகாணமான விஸ்கான்சினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப் சென்றபோது, ‘இது ஒரு உள்நாட்டு பயங்கரவாதம்’ என விமர்சனம் செய்து ஜாக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை.
இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை விமான நிலையத்தில் தனி அறையில் சந்தித்தார். அவர்களிடம் ஜோ பைடன் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜேக்கப்பிடம் ஜோ பைடன் வீடியோ கால் மூலம் பேசினார். சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் கினோஷா நகருக்கு சென்ற பைடன் தேவாலயத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார்.