- வீடு›
- செய்திகள்›
- ஜான் போல்டனின் புத்தகம் வெளியாவதை தடை செய்ய முடியாது - அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
ஜான் போல்டனின் புத்தகம் வெளியாவதை தடை செய்ய முடியாது - அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
By: Karunakaran Sun, 21 June 2020 11:06:08 AM
அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள ’அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ என்ற தலைப்பிலான புத்தகம் வரும் 23 அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுடன் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக நடைமுறைகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இந்த புத்தகம் வெளியாக இருந்தாலும், அந்த புத்தகத்தின் பதிப்புகள் செய்தி நிறுவனங்களுக்கும், பல அரசியல் விமர்சகர்களின் கைகளுக்கும் ஏற்கனவே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புத்தகத்தை வாங்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர். அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இல்லை என போல்டன் கூறிய கருத்து புத்தகம் மீது மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என டிரம்ப் நிர்வாகத்தின் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, புத்தகம் ஏற்கனவே பலரது கைகளுக்கு சென்று விட்டதால், இனிமேல் இதை தடுப்பது இயலாத காரியம் என்று கூறி புத்தகம் வெளியீட்டை தடை செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். இருப்பினும், புத்தகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்கள் பகிரப்பட்டிருந்தால் போல்டன் சட்ட ரீதியில் விவகாரங்களை சந்திக்க நேரிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.