- வீடு›
- செய்திகள்›
- ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு
ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு
By: Karunakaran Tue, 27 Oct 2020 11:59:44 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு முடிவு கட்ட இந்தியா உள்பட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கி, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்து வருகின்றன.
அதன்படி, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து 2-ம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. தற்போது, ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்று கூறினார்.