உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை - 3 பேர் கைது
By: Karunakaran Tue, 25 Aug 2020 11:31:10 AM
உத்தர பிரதேச மாநிலம் பாலியா என்ற கிராமத்தில் ரத்தன் சிங் என்பவர் வசித்து வந்திருந்தார். இவர் தனியார் சேனல்களுக்கு செய்திகள் வழங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீடு கிராமத்தில் உள்ளது. இருப்பினும் அவர் நகரத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கிராமத்தில் வசித்து வரும் ரத்தன் சிங் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் இவர் வீட்டையொட்டி சுவர் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த ரத்தன் சிங் பக்கத்து வீட்டுக்காரரிடம் இதுகுறித்து கேட்க நேற்றிரவு கிராமத்திற்கு சென்றுள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர் இவரது வீட்டையொட்டி எழுப்பிய சுவரை ரத்தன் சிங் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இதில் ரத்தன் சிங் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.