நாமே தீர்வு திட்டத்தில் இணைய அழைப்பு விடுத்த கமல்ஹாசன்!
By: Monisha Thu, 11 June 2020 11:30:19 AM
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை செய்துவருகிறார். அவற்றில் ஒன்று ‘நாமே தீர்வு’. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லை என்ற வகையில் ஒரு தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அதன்மூலம் சென்னையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொரோனாவில் இருந்து நம்மை நாமே காத்து கொள்வோம் என்ற அடிப்படையில் இந்த ‘நாமே தீர்வு’ என்பதை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் ‘நாமே தீர்வு’ திட்டத்திற்கு பெண்களுக்கு அழைப்பு விடுத்தார். பெண்களுக்கான உதவிகள், பெண்களுக்கான ஆலோசனைகள் அதை பெண்கள்தான் செய்ய முடியும் என்றும், பெண்களே, நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமே இல்லை என்றும் அவர் பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதேபோல் அவர் தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான் என்றும், தன்னார்வத்தொண்டு நிறுவன நண்பர்களே, கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை என்றும் நாம் இணைந்து மீட்போம் சென்னையை என்றும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.