மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தார் கங்கனா ரணாவத்
By: Nagaraj Wed, 09 Sept 2020 7:06:28 PM
மும்பைக்கு வந்தார் கங்கனா ரணாவத்... பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு இன்று வந்துள்ளார்.
நடிகா் சுசாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்பு கிளம்பியது. மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் சஞ்சய் ரௌத் எழுதினாா்.
இதையடுத்து, ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று கங்கனா சவால் விடுத்தாா்.
கங்கனாவுக்கு ஆதரவாகவும், சிவசேனை அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி
கண்டனம் தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டன. இது
மும்பை அரசியல் மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய
அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதன்படி அவருக்கு துப்பாக்கியுடன்
கூடிய 10 சிஆா்பிஎஃப் கமாண்டோ வீரா்கள், 24 மணிநேரமும் சுழற்சி முறையில்
பாதுகாப்பு அளிக்க இருக்கின்றனா். இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல்
பாலிவுட் பிரபலம் கங்கனா.
ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள கங்கனாவின்
வீட்டுக்கும் மாநில அரசு சாா்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கங்கனாவுக்கு அளித்துள்ள பாதுகாப்பை வரவேற்பதாக ஹிமாசலப்
பிரதேச முதல்வா் ஜெய் ராம் தாக்குா் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில்
தனது சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார்
கங்கனா. அவருடைய சகோதரியும் மேலாளருமான ரங்கோலியும் உடன் வந்துள்ளார்.
விமான நிலையத்தில் கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனை
தொண்டர்கள் கருப்புக்கொடி காண்பித்தார்கள்.