போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதிக்கு 5 நாள் போலீஸ் காவல் விதிப்பு
By: Karunakaran Mon, 07 Sept 2020 7:05:18 PM
கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவபிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகிணி திவேதி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்யா ஆல்வாவுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் விசாரணைக்கு நடிகை ராகிணி திவேதி சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டதற்கேற்ப, 5 நாள் போலீசார் காவலில் எடுத்து அவரை விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நியாஸ் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கேரளாவை சேர்ந்த நியாஸ் கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.