அலையே இல்லாமல் குளம் போல் அமைதியாக காட்சி அளித்த கன்னியாகுமரி; கரையோர மக்கள் அச்சம்
By: Monisha Mon, 05 Oct 2020 10:47:46 AM
தென் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடலின் தன்மை மாறி வருகிறது.
கன்னியாகுமரியில் கிழக்கே வங்கக்கடலும், தெற்கே இந்திய பெருங்கடலும், மேற்கே அரபிக்கடலும் அமைந்துள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பவுர்ணமிக்கு பிறகு கடந்த சில நாட்களாக கடலின் தன்மையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 2 நாட்கள் இரவு நேரங்களில் கடல் சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. நேற்று முன்தினம் 3-வது நாளாக பகலில் கடல் உள்வாங்கியது. இதனால், கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிந்தன.
இந்த நிலையில் நேற்று கடல் சகஜ நிலைக்கு திரும்பினாலும், வங்க கடல் அலையே இல்லாமல் குளம் போல் அமைதியாக காட்சி அளித்தது. அதேநேரத்தில் இந்திய பெருங்கடலும், அரபிக்கடலும் சாதாரண அலையுடன் காட்சி அளித்தது.
இதனை கரையோர பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். தினம் தினம் நிலைமாறி வரும் கடலால், கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது.