இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
By: Nagaraj Mon, 27 Mar 2023 11:08:14 PM
பெங்களூரு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு... கர்நாடகாவில் ஒக்கலிகர் – லிங்காயத் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மத சிறுபான்மையினருக்கு (முஸ்லிம்கள்) 2பி அந்தஸ்தில் தனி இட ஒதுக்கீடு ரத்து. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும். இதில் 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.
இதன் மூலம் முஸ்லிம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். 2A நிலையில் உள்ள 15 சமூகங்களுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தினருக்கு தலா 2 சதவீதமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம் ஒக்கலிகர் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு தலா 2 சதவீத இடஒதுக்கீடு கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாஜக அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.