முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருணா பிரசாரம்; வேட்பாளர் ஹமீட் குற்றச்சாட்டு
By: Nagaraj Wed, 08 July 2020 1:54:21 PM
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருணா பிரசாரம்... 'கருணா முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுத்து வாக்குகளை சேகரிக்க முற்படுகின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "தேசிய காங்கிரஸை நாம் போட்டிக் கட்சியாகக் கருதவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளில் தற்போது சிலர் கைவைக்க தொடங்கியுள்ளனர்.
2015 ஆண்டு முஸ்லிம் சமூகம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்ற போது தனித்து நின்று ஆதரவு வழங்கியவர்தான் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா. அதனால் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இவர், தற்போது அவரின் விசுவாசத்திற்குரிய பெரும்பான்மை கட்சியினால் தனித்து விடப்பட்டுள்ளார்.
ஆனாலும் அவர் மொட்டு கட்சியின் அங்கமாகத்தான் செயற்பட்டு வருகின்றார். அதாவுல்லாஹ் தனது எஜமானுக்கு கட்டுப்பட்ட ஒருவராகவே இருந்து வருகின்றார்.
கருணாவை தமது பிரதிநிதியாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது
அவருக்குத் தெரியும். அவரது சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மக்கள் அவரை
ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் தற்போது அம்பாறை மாவட்டத்திற்கு
வந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையினராக முஸ்லிம்
மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரதேசவாதத்தை முஸ்லிம் வேட்பாளர்களும் தமது
அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். கருணாவினால் தேர்தலில் முஸ்லிம்
மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. தேர்தல் முடிவுகளும் அவரால்
பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் தனக்கு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக
முஸ்லிம்களை கருவியாக பயன்படுத்துகின்றார்.
எம்மவர்களில் சிலரும்
தமிழர்களை கருவியாக பாவித்து பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.ஆனால்
நாங்கள் எந்தவொரு இனவாத கருத்தையும் முன்னெடுக்கவில்லை. இவ்வாறான மன
நிலையில்தான் கருணாவின் பிரசாரமும் அமைகின்றது. இவ்வாறான பிரசாரங்களினால்
எமக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.