கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவர் - மம்தா பானர்ஜி புகழாரம்
By: Karunakaran Sat, 08 Aug 2020 3:42:53 PM
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தின் மூத்த தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கேரள முதல்வர் பினராய் விஜயன், கேரள ஆளுநர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் கருணாநிதி இறந்த போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
'ஓய்வெடுக்காமல் உழைத்தவன்...இதோ ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறான்' என்று கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட சந்தனபேழையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவரை புகழ்ந்து கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில் அவரை நான் நினைவு கூறுகிறேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. மேலும் அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவரும் ஆவார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.