கேரளா தங்க கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் இந்த மதத்தை சேர்ந்தவரா ? - வைரலாகும் தகவல்
By: Karunakaran Fri, 17 July 2020 11:48:46 AM
கேரள மாநிலத்தில் நடந்த தங்கக் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் உண்மையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. தனது அடையாளத்தை மறைக்க இவர் இந்து பெயர் கொண்டிருப்பதாகவும், இஸ்லாம் மதத்தை சேர்ந்த கேரள மந்திரியுடன் உரையாடும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என கூறும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
இந்த வைரல் பதிவில், ஏன் ஊடகத்தினர் இவரை ஸ்வப்னா சுரேஷ் என அழைக்கின்றனர். இவரது உண்மையான பெயர் மும்தாஜ் இஸ்மாயில். கேரளா மாடல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ததில், தற்சமயம் வழக்கை விசாரணை செய்யும் என்ஐஏ மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை, ஸ்வப்னா சுரேஷ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்று எந்த தகவலையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஸ்வப்னா சுரேஷ் உண்மை பெயர் மும்தாஜ் இஸ்மாயில் என்ற செய்தியும், அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்ற செய்தியும் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இந்த வைரல் தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.