தமிழக எல்லை பெட்ரோல் பங்குகளில் குவியும் கேரளா வாகனங்கள்
By: Nagaraj Sun, 02 Apr 2023 2:51:53 PM
களியக்காவிளை: தமிழக எல்லையில் குவியும் கேரளா வாகனங்கள்... கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. இதனால் தமிழக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப கேரள வாகனங்கள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கேரளாவில் ஒரு லிட்டர் ரூ. 107-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.109 ஆகவும், அதே போல் ரூ.96-க்கு விற்பனையான டீசல் ரூ.98 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆனால் தமிழக – கேரளா எல்லையான குமரியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.87-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.50-க்கும் விற்கப்படுகிறது. இதை அறிந்த தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குமரியின் எல்லைப் பகுதியில் உள்ள தமிழக பெட்ரோல் பங்குகளுக்கு வந்து தங்கள் இரு சக்கர வாகனம், கார் மற்றும் லாரிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
கேரளா எல்லை பகுதியில் உள்ள கேரள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்-டீசல் நிரப்ப யாரும் வராததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது. கேரள மாநிலம், பாறசாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ் கூறுகையில், ‘கேரள அரசு பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இதனால் எங்களை போன்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கார், லாரி டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, வாடகை கார், ஆட்டோ கட்டணமும் உயர வேண்டும். இதனால் சின்ன, சின்ன சவாரிக்கு மக்கள் வருவதில்லை, அரசு பஸ்சுக்கு காத்து நின்று ஏறி செல்கின்றனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினால் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.50-ம் லாபம் கிடைக்கும்.. கேரள அரசு வாகன ஓட்டிகளின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என கூறினார்.