காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விவகாரம்: கனடா தூதரை அழைத்து கண்டனம்
By: Nagaraj Wed, 05 July 2023 8:38:22 PM
புதுடில்லி: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனேடிய தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்களது பெயர்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனேடிய தூதரை நேரில் வரவழைத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீக்கியர்கள் அதிகம் வாழும் ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி மாநிலம் அறிவிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் என அறியப்படும் இவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர்களை மிரட்டும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவர்களின் பெயர்கள் அடங்கிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனேடிய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.