திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் கடத்தல் தங்கம் பறிமுதல்
By: Monisha Wed, 30 Dec 2020 08:33:35 AM
சமீப காலமாக வெளிநாடுகளிலிருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக விமானங்கள் இயக்கப்படவில்லை. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று நேற்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து சுமார் 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மற்றொரு நபர் தனது உடைமைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.