தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கிம் ஜாங் அன் மன்னிப்பு
By: Karunakaran Sat, 26 Sept 2020 7:10:28 PM
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் போக்கு உருவானது. கடந்த ஜூன் மாதம் கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது.
தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை கடுமையாக்கியதுடன், தங்களது எல்லைக்குள் அத்துமீறி நுழையும் யாரையும் சுட்டுக் கொல்ல அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தென் கொரியாவின் மீன்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட கொரியாவின் எல்லைக்குள் நுழைந்தார்.
தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரியை சுற்றி வளைத்த வடகொரியா ராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சரியான விளக்கம் அளிக்காமல் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் வட கொரியா ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர். மேலும் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். தென்கொரியா ராணுவம் வடகொரியா ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
தற்போது தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், அதிபர் மூன் ஜே இன்னுக்கு கடிதம் அனுப்பினார். அதில் அவர் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தால் அதிபர் மற்றும் தென்கொரிய குடி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததற்கு அவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.