Advertisement

குறுவை சாகுபடி பணிகள்: வேளாண் அதிகாரி ஆய்வு

By: Nagaraj Sat, 01 July 2023 11:06:23 PM

குறுவை சாகுபடி பணிகள்: வேளாண் அதிகாரி ஆய்வு

தஞ்சாவூர்: குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு... தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார்.

மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஆயிரம் எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் வழங்க வேண்டிய குறுகிய கால நெல் ரகங்களான கோ-51 மற்றும் டி. பி. எஸ்-5 ஆதார விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான நெல் நுண்ணூட்டம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களும் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள நான்கு வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு நெல் விதைகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயிர் உரங்களும் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

associate director of agriculture,research,agriculture,farmers,cultivation ,வேளாண் இணை இயக்குனர், ஆய்வு, குறுவை, விவசாயிகள், சாகுபடி

மதுக்கூரில் உள்ள 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 11 தனியார் உர விற்பனை மையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு உர இருப்பு மற்றும் விற்பனை குறித்த கள நிலவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா மதுக்கூர் வட்டாரத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்களில் ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகளிடம் தேவைகள் மற்றும் காணப்படும் இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மாநில திட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தேவையான யூரியா, டி. ஏ. பி. பொட்டாஸ் போன்ற உரங்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது பற்றி மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதியிடம் கேட்டறிந்தார்.

ஆய்விற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் உரம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

Tags :