அமித்ஷா வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கிறது; எல்.முருகன்
By: Monisha Tue, 17 Nov 2020 08:38:23 AM
பாரதீய ஜனதா கட்சியில் பல்வேறு தொழில் துறையினர் இணையும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்து கூறியதாவது:-
பா.ஜனதாவில் தொழில்முனைவோர் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து வருகிறார்கள். இதற்கு பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சி தான் காரணம். தொழில்துறையை சேர்ந்த 120 பேர் கோவையில் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இது பா.ஜனதா கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி தமிழகம் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அமித்ஷா வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும். அமித்ஷா சென்ற இடங்களில் எல்லாம் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. அது எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கிறது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
வேல்யாத்திரை குறித்த வழக்கில் நீதிமன்றம் சொன்னது குறித்து இங்கு பேசுவது சரியானதாக இருக்காது. தமிழகத்தில் தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகையை முற்றுகையிடுகிறார்கள். ஆனால் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. பயங்கரவாதிகளை கையாள்வதில் சில வழக்குகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை. அது குறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து சொல்லி இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.