- வீடு›
- செய்திகள்›
- ஏழைகள் மீது இரக்கம் காட்டாதது இதயத்தை நொறுக்குகிறது - எதிர்க்கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி
ஏழைகள் மீது இரக்கம் காட்டாதது இதயத்தை நொறுக்குகிறது - எதிர்க்கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி
By: Monisha Sat, 23 May 2020 11:13:43 AM
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிரான போர் தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை இருக்கும் என்றே தோன்றுகிறது. கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் இல்லாததால் இப்போது திணறுகிறது. ஊரடங்கு விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசிடம் தெளிவில்லை. ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வியூகமும் இல்லை. பரிசோதனை வழிமுறைகள், கருவிகள் இறக்குமதி ஆகியவற்றிலும் தடுமாறுகிறது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது.
கொரோனா தாக்குதலின் அடையாளமாக, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, பணம், மருந்து ஆகியவை இல்லாமல் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், கடைக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் என 13 கோடி பேரின் நிலைமையையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துமாறும், இலவச உணவு தானியங்களை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குமாறும் நாங்கள் வலியுறுத்தினோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயில்களை ஏற்பாடு செய்யுமாறு கூறினோம். ஆனால் எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் ஆகிவிட்டது.
மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சிக்கிறது. இதுபற்றி யாரிடமும் ஆலோசனையோ, நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான முடிவை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த அரசிடம் எந்த தீர்வும் இல்லை என்பது கவலை அளித்தாலும், ஏழைகள் மீது இரக்கம் காட்டாதது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஏற்கனவே கொரோனாவை சந்திக்கும் நிலையில், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ‘அம்பன்’ புயல், இரட்டை பேரிடியாக அமைந்துள்ளது. அந்த புயலை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மீட்பு, நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.