மியான்மரில் பச்சை மரகதக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு
By: Karunakaran Thu, 02 July 2020 2:23:45 PM
மியான்மர் நாட்டில் உள்ள கச்சின் மாநிலத்தின் ஹபாகந்த் என்ற பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு மரகதக்கல் வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை அங்கு வழக்கம் போல பணி நடைபெற்று கொண்டிருந்தது.
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே கனமழை காரணமாக அந்த நிலப்பகுதி ஈரமாக இருந்துள்ளது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் போது, மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் மண்ணுக்குள் அமுங்கினர்.
இந்த நிலச்சரிவில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.