பிபிசி ஆவணப்படத்திற்கு விதித்த தடையை எதிர்த்து வழக்கு
By: Nagaraj Mon, 30 Jan 2023 11:32:10 PM
புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய பாஜக அரசு விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் கடந்த 17ம் தேதி வெளியிட்டது. ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில், பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. இதனிடையே, யூடியூப்பில் வெளியான பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிபிசி ஆவணப்படத்தை நீக்கியது மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 16 இன் கீழ் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெயரிடப்படாத ஆதாரங்களின்படி, யூ-டுயுப் மற்றும் ட்விட்டர் ஆகியவை தடைக்கு இணங்கி, வீடியோக்கள் மற்றும் ட்வீட்களுக்கான இணைப்புகளை அகற்றியுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய பாஜக அரசு விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை பிப்ரவரி 6-ம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக, மத்திய அரசு விதித்த தடையை மீறி கேரளாவில் பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்தத் தடையை மீறி படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.