Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

By: Monisha Thu, 24 Dec 2020 2:40:37 PM

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறதையொட்டி தலைவர்கள் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை உலகிற்கு தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயனிக்கிற கிறிஸ்துவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டறக்கலந்து மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த சேவை மனப்பான்மையாடு அன்பு காட்டுவதில் கிறிஸ்துவ மதம் அளப்பரிய பங்காற்றி வருகிறது.

மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்திற்கு வெளிச்சமாக, கருணை வெள்ளமாகத் திகழும் இயேசு பெருமானின் போதனைகளை நினைவுகூர்ந்து, மன ஆறுதல் பெறவும், மகிழ்ச்சி அடையவும், உலகம் முழுமையும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

christmas,greetings,leaders,celebration,joy ,கிறிஸ்துமஸ்,வாழ்த்து,தலைவர்கள்,கொண்டாட்டம்,மகிழ்ச்சி

சாதி மதங்களின் பெயரால், வெறுப்பும் பகையும் வளர்ந்து, அதன் விளைவாக, கலவரங்களும், ரத்தக்களறிகளும் மனித சமுதாயத்துக்குப் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், மீட்பர் இயேசு மலையின் மேல் நின்று, அமுத மொழிகளாகப் பொழிந்த கருத்துகள், சுயநலமும் பேராசையும் அலைக்கழிக்கும் இன்றைய உலகத்திற்கு நல்வழி காட்டுகின்றன. சகோதரத்துவமும், மனித நேயமும், மக்கள் மனதில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளதாவது, உலக மக்களின் உயர்விற்காக, அவர்களின் அறியாமை இருளை போக்கி புதுவாழ்வை ஏற்படுத்த, இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் இயேசு கிறிஸ்து, தம் வாழ்நாள் முழுவதும் மக்களின் நலத்திற்காகவே வாழ்ந்தவர். இயேசு கிறிஸ்து அவதரித்த இந்நாளில் அவரின் போதனைகளை பின்பற்றி, அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். இல்லாதோருக்கு இயன்றதை அளிப்போம். அனைத்து கிறிஸ்துவ, சகோதர, சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

christmas,greetings,leaders,celebration,joy ,கிறிஸ்துமஸ்,வாழ்த்து,தலைவர்கள்,கொண்டாட்டம்,மகிழ்ச்சி

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தியம் என்பது மனித வடிவில் பிறந்து, தர்மம் என்னும் வேதமாய் நிலைத்து, அன்பின் ஒளியைப் புவியெங்கும் பரவச் செய்து, பூமியின் பாவ பாரத்தைச் சுமந்து உலகை ரட்சிக்க வந்த தேவதத்துவம்தான், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை. இயேசு பிரான் பிறந்த திருநாளை உற்சாகமாக கொண்டாடும் உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், செல்வமும் பெருகி என்றென்றும் சிறப்புடன வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

மேலும், திருநாவுக்கரசர் எம்.பி., தொழில் அதிபர் விஜி. சந்தோசம், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தேசியவாத காங்கிரஸ் தமிழக துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags :