லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Thu, 06 Aug 2020 10:40:23 AM
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. இந்த வெடிவிபத்து நடந்த சில வினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.
துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார். இந்த விபத்தினால் அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது.
இந்த வெடிவிபத்தில் 73 பேர் வரை உயிரிழந்திருந்ததாக நேற்று காலை தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, பெய்ரூட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வெடிவிபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலர் மாயமாகியதால், அவர்களை தேடும்பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெய்ரூட் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.